search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி பலி"

    • டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலி
    • லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள கல்லங்குழி நாராயணத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் அருள் தாஸ் (வயது 60). இவரது மனைவி புஷ்ப ராணி, இவர்களது மகன், மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

    ஜஸ்டின் அருள் தாஸ் வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் விவசாய பணியும் செய்து வந்தார். நேற்று மதியம் அவர், மாட் டிற்கு உரம் வாங்கு வதற்காக வேர் கிளம்பிக்கு புறப்பட்டார். முண்டவிளை அருகே சென்ற போது பின்னால் டாரஸ் லாரி வந்துள்ளது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.

    இதில் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை கண்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜஸ்டின் அருள்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் சோலைச்சேரி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது54) இவர் ராஜபாளையம் -தென்காசி சாலையில் சித்தாபுரம் விலக்கு பகுதியில் மாட்டு தீவனம் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரோட்டில் நடந்து சென்றார். அவர் சேத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் மாரியப்பனும், மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்த கற்பகராஜ்(30)என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தனர்.

    மாரியப்பனை சேத்தூர் போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கற்பக ராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வீரசெல்வமுத்து (வயது 25), மீன் வியாபாரி.

    சம்பவத்தன்று திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டிணத்திற்கு மீன் வியாபாரம் செய்ய வீரசெல்வமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்பை பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரசெல்வமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வீரசெல்வமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் இறந்த வாலிபரின் தந்தை ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை ஒட்டி வந்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துமாரியப்பன் எட்டயபுரம் மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துமாரியப்பன் பலியானார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (வயது 42). இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.

    வியாபாரி பலி

    இந்நிலையில் நேற்று தனது 2 மகன்களை டியூசனிலிருந்து வீட்டுக்கு அழைத்து கொண்டு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் முத்துமாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த அவரது 2 மகன்களையும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர கிகிச்சை அளிக்க்பபட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    எதிரே வந்து விபத்து ஏற்படுத்திய பசுவந்தனை ராஜூ நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சில் சிக்கினார்

    அங்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலைமீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து திசையன்விளை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான ராஜேந்திரன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரனின் மனைவி பிச்சைக்கனி தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்து பிச்சுவிளை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    • தினேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் நள்ளிரவு 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் எதிர்பாராத விதமாக தினேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
    • டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி தில்லை நகர் புறா தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமாரன் .அவரது மகன் பாரதிராஜா (வயது 24). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனதுடாட்டா ஏசி வேன் மூலம் காரைக்காலுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வீட்டு மீண்டும் தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்பொழுது வடக்குத்து போலீஸ் நிலையம் சென்னை - தஞ்சாவூர் சாலையில் வடலூர் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், டாட்டா ஏ.சி. வேன் மீது அதிவேகமாக மோதியது. இதில் டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து பாரதிராஜா சகோதரர் பிரசாந்த் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி பால் வியாபாரி பலியானார்.
    • ராஜபாளையம் ரெட்டியபட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கணபதி நாடார் தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 51). பால் வியாபாரி. இவர் தனது ஊரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    தென்காசி மெயின் ரோட்டில் தளவாய்புரம் விலக்கு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் தர்மரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இந்தநிலையில் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் தர்மரின் அண்ணன் விஜயன் வந்தார். அவர் தர்மரை அங்கிருந்து மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தர்மர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், விபத்துக்கு காரணமான 108 ஆம்புலன்சின் டிரைவரான ராஜபாளையம் ரெட்டிய பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் மாடியில் இருந்து குறுகிய பாதை வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.
    • பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி எம்.எஸ்‌. லைன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 49), வியாபாரி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் ஐந்து லாந்தர் பகுதியில் முதல் மாடியில் இருந்து குறுகிய பாதை வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

    அவ்வாறு வரும்போது நிலை தடுமாறியதால், மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை.

    நேற்று காலையில் அவர் இறந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் வியாபாரி பலியானார்.
    • வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வசிஷ்டபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொய்யாப்பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேல்விழி(30). இவர்களுக்கு அஸ்வின்(10), சஸ்வின்(6) என்ற இருமகன்களும், சுபிக்சா(3) என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக விழுப்புரத்திற்கு சென்று கொய்யாப்பழங்களை மொத்த விலையில் வாங்கி வந்து விற்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லிக்காய் மற்றும் விளாம்பழம் மொத்த விலையில் வாங்குவதற்காக பாபு தனது மனைவியிடம் ரூ.2,500-ஐ வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு செல்லும் வழியில் பெரம்பலூர் வந்துவிட்டு, கலெக்டர் அலுவலக சாலைவழியாக திருச்சி-சென்னை நான்குவழிச்சாலையில் துறைமங்கலம் ஏரிக்கரை அருகே திருச்சியை நோக்கி யூ வளைவில் திரும்புவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாபு ரத்தம் சொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்விழி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    • கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து வியாபாரி பலியானார்.
    • போலீசார் விபத்துகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேற்குநிரோத்தான் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). இவருக்கு லேகாபாய் என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். காய்கறி வியாபாரியான கோபிநாத் சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

    கொடைரோடு சிப்காட்டிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோயமுத்தூருக்கு சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்றார்.

    கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அம்பாத்துரை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 67). காய்கறி வியாபாரி.

    சம்பவத்தன்று அவர் தனது மருமகளுடன் பெரியபொது பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு மரத்தில் இருந்த பலாபழத்தை பறித்தனர். பின்னர் பரமசிவம் மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்தார்.

    அப்போது பரமசிவம் நின்றிருந்த மரக்கிளை திடீரென முறிந்தது. அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×